தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பாபா நகரைச் சேர்ந்த மாடசாமி (வயது 65), வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் கழுகுமலையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாடசாமி தனது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.