தமிழக செய்திகள்

அடுத்தடுத்து சோதனையில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் ஏற்கனவே சோதனையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது 6-வதாக கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெறு வருகிறது.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தெலுங்கானா மாநிலத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கே.பி.அன்பழகனின் சொந்த மாவட்டமான தருமபுரியில் மட்டும் 41 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சோதனையில் சிக்கும் 6-வது முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவார்.

இதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

தற்போது அந்த வரிசையில் 6-வது முன்னாள் அமைச்சரகாக கே.பி.அன்பழகன் இணைந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடைபெறும் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.