சென்னை,
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வீடுகள் மற்றும் கோவில்களில் கிருஷ்ணர் பொம்மைகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணர் பொம்மைகள் மற்றும் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை கொசப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல விதமான கிருஷ்ணர் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசி உலர வைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாம்பழ கிருஷ்ணர், மோகன கிருஷ்ணர், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர், ஊஞ்சல் கிருஷ்ணர் மற்றும் கண்ணனின் விதவிதமான லீலைகளை சித்தரிக்கும் வண்ணமயமான, பல புதுமையான வடிவங்களில் இந்த ஆண்டு பொம்மைகள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் லதா கூறியதாவது:
இங்கு 6 அங்குலம் முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு வடிவ கிருஷ்ணர் சிலைகள் களிமண் மூலம் தயாரிக்கப்படுகின்றன. ரூ.15-ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை விலைகளில் கிடைக்கின்றன. சென்னையில் மயிலாப்பூர், ஆவடி, அம்பத்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சிலைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நீர்நிலைகளைப் பாழ்படுத்தும் காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்படும் பொம்மைகள் தயாரிப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.