தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி: கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு

நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த போது மாற்றுத்திறனாளி தீக்குளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மாதர்சனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் வசிக்கும் திம்மையா மற்றும் திம்மராயன் மகன் நவீன் மற்றும் சித்தன் ஆகியோர் எதிர் தரப்பு காரரான சேட்டு என்பவருக்கு ஆதரவாக, வெங்கடேஷின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து உதைத்து விட்டு, ஊர் பஞ்சாயத்துகாரர்கள் கூப்பிடுகிறார்கள் என்று அழைத்துள்ளனர்.

ஆனால் இவர் வர மறுத்ததாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து இன்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, பின்னர் வெளியே வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

108 ஆம்புலன்ஸசிர்கு தகவல் கொடுத்தும், சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்து வெங்கடேஷனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.