திருப்பத்தூர்
மானவல்லி கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கந்திலி ஒன்றியம் மானவல்லி கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை மங்கள இசை, கோ பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆச்சார்யா வர்ணம், சங்கல்பம், விஷ்வக்சேன ஆராதனை, மஹா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, சாற்று முறை, கும்பபூஜை, விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், மூன்றாம் கால ஹோமம், அஷ்டாஷார மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, நெய்வேத்யம், மகாதீபாராதனை உள்ளிட்ட நடந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களுடன் மேளதாளத்துடன் சென்று லட்சுமி நரசிம்ம சாமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமோ நாராயணா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து லட்சுமி நரசிம்ம சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா எம்.தேவராஜ் நாயுடு மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.