கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

குன்றத்தூர்: தேர்வு பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

பொதுத்தேர்வு குறித்த பயத்தினால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்தூர்,

குன்றத்தூர், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி (15 வயது). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பாலாஜியும் அவரது மனைவியும் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், திவ்யதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரும்பி வந்து பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், திவ்யதர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த பயத்தில் இருந்ததாகவும், பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்தான் எடுப்போம் என்ற பயத்தினால், தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT