குரங்கு 
தமிழக செய்திகள்

குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு

சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குட்டிக்குரங்கு ஒன்று சாலையோரமாய் இறந்து கிடந்தது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் சமீபகாலமாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குரங்கு கூட்டம்

இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்களுக்குள் புகுந்து வரும் குரங்கு கூட்டங்கள், கேபிள் வயர்கள் மற்றும் இணையதள வயர்களை கடித்து துண்டித்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் நிம்மதியிழந்த பொதுமக்கள், இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கண்கலங்க வைத்த காட்சி

இந்த நிலையில், வெலிங்டன் பகுதியில் பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் சோகமான காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குட்டி குரங்கு ஒன்று சாலையோரமாக பரிதாபமாக இறந்து கிடந்தது. ஆனால், தன் குட்டி இறந்தது கூட தெரியாமல் பாச போராட்டம் நடத்திய தாய் குரங்கு, அந்த குட்டியை தனது மார்போடு அணைத்தபடி தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.

தாய் பாசம்

குட்டிக்கு உயிர் இருப்பதாகவே நினைத்து, அதை தூக்கி கொண்டு தாய் குரங்கு தவிப்புடன் சுற்றிய இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், பலரையும் கண்கலங்கச் செய்தது.

SCROLL FOR NEXT