சென்னை,
'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று பேசினார். இந்த நிகழ்ச்சி தமிழக பா.ஜனதா சார்பில் சென்னை கோயம்பேட்டில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் நேற்று 134-வது முறையாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசினார். 100 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த இந்திய தடகள வீரர்கள், சேலம் மாம்பழம் உள்பட பல்வேறு சிறப்புகளை பேசினார்.
நெதர்லாந்தில் இருந்து சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகளை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொன்மையான சிலைகள் பல மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதனை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். சோழர் காலத்தின் பெருமைகளை உலகிற்கு பிரதமர் மோடி எடுத்து சொல்லியிருக்கிறார். இவ்வாறு கூறினார்.