சென்னை,
தன்னுடைய சொத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது;
பரங்கிமலையில் 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் பணிமனைக்காக கொடுத்த இடத்தை 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.
குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.
அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, சிவசங்கர் ஆகியோர் மோசடி, ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.