சென்னை,
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 'தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது
முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் லேப்டாப் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 20 லட்சம் லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்த டெண்டரில், லேப்டாப் தயாரிப்பின் முன்னணி நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டின.
இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏசர், டெல், எச்.பி, (Acer, Dell, HP) ஆகிய 3 நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப் விலை தொடர்பான தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளி பெறப்படும். தொடர்ந்து ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.