சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.01.2026 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தில் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அவ்வாறாக, தமிழகம் முழுவதும் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரிகளை சார்ந்த 1,657 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வெ. குமரேசன், கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி. ஹரிஹரன், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.