சென்னை,
சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியைப் பெறுகிறார்கள்.
வக்கீல்களுக்கான இந்த தகுதித்தேர்வு நவம்பர் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில் அக்டோபர் 27-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் மட்டுமே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளம் வக்கீல்கள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்தில் 3 நகரங்களில் மட்டும் தேர்வு மையங்களை அமைத்திருப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.
எனவே, இந்தத் தேர்வை எழுதவிருக்கும் இளம் வக்கீல்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை, சேலம், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சிலிடம் முறையிட்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.