லெஜண்ட் சரவணன் 
தமிழக செய்திகள்

புதிய அரசு ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும்... லெஜண்ட் சரவணன் வேண்டுகோள்

தமிழகத்தில் புதிதாக ஓட்டு போட்ட இளைஞர்கள், ஒரு பெரிய மாற்றத்தை, எழுச்சியை உண்டாக்கியிருப்பதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்தார்.

கும்பகோணம்:

வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தயாரிப்பாளரும், நடிகரும், பிரபல தொழிலதிபருமான லெஜன்ட் சரவணன், கும்பகோணம் வழியாக திருவாரூர் சென்றார். அப்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வருகை தந்த லெஜண்ட் சரவணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இப்போ நடிச்சிருக்க 'லீடர்' மற்றும் 'லெஜெண்ட்' இரண்டு படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு. நாங்க என்ன எதிர்பார்த்தோமோ அந்த வரவேற்பு இருக்கு. எதிர்பார்ப்புகளும் வரவேற்பும் அதிகமாயிட்டே இருக்கு. இதையடுத்து மூணாவது படத்துக்கான விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. நான் முன்னாடியே சொல்லிருக்கேன், அதுல வந்து ட்ரிபிள் ஆக்ஷன் பண்றேன்னு. இதே டைரக்டர் துரை செந்தில்குமார் தான் அந்த படத்தை பண்றாங்க. அதுக்கான வேலைகள் போயிட்டு இருக்கு.

இளைஞர்களின் எழுச்சி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிக பெரும்பான்மையோட வந்திருக்காங்க. இதை இளைஞர்களுடைய எழுச்சியா பார்க்கிறோம். அதாவது இளைஞர்கள் மிகப்பெரிய ஒரு எழுச்சியோட இந்த முடிவை கொடுத்திருக்காங்க. ஜல்லிக்கட்டுல அவங்களுடைய எழுச்சி ஆரம்பமாச்சு. அதனுடைய தொடர்ச்சி தான் இன்று இந்த ஆட்சி மாற்றத்தை மிகப்பெரிய எழுச்சியாக்கியது அந்த இளைஞர்கள் தான். அதாவது, இன்னைக்கு புதுசா ஓட்டு போட்ட இளைஞர்கள், ஒரு பெரிய மாற்றத்தை, எழுச்சியை உண்டாக்கியிருக்காங்க.

அவங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய அரசு ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும். ஒரு நல்லதொரு வேலைவாய்ப்பும், அதாவது மக்கள் பணம் மக்களிடமே இருக்கணும், வரிகளை குறைத்து, சில அரசு செலவை குறைத்து மக்கள் பணம் மக்களிடமே இருந்து அப்படி ஒரு ஆட்சி அமைஞ்சதுன்னா மக்களுக்கும், மாணவர்களுக்கும் எல்லோருக்குமே ஒரு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை கொடுக்கும்னு நினைக்கிறேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி

இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சி சரியா இல்லைன்னு சொல்லல. இந்த எழுச்சியை தானே பார்க்கிறோம். இன்னைக்கு மாற்றத்தை விரும்புறாங்க. என்ன மாற்றத்தை விரும்புறாங்க, இன்னும் வேலைவாய்ப்புகள் அதிகமா வேணும்னு விரும்புறாங்க. தமிழ்நாட்டுல அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த ஆட்சிமுறை சரியாகத்தான் போயிட்டு இருந்தது. அதாவது எந்த ஆட்சியா இருந்தாலும் அவங்கவங்க ஒரு பாணியில அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருந்தாங்க.

இந்த முறை எதிர்பார்ப்பு வேற மாதிரி இருக்கு. இந்த தலைமுறையினருடைய எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. அவங்க முற்றிலும் இதுவரைக்கும் நடக்காத ஒரு சரித்திர எழுச்சியை உண்டாக்கிட்டாங்க.

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது என்பது வழக்கமாக எல்லா தலைவர்களுக்கும் நடப்பது தான். அதாவது வெற்றி, தோல்வி மாறி மாறி நடக்கும். இந்த தோல்வி ஒரு எழுச்சி நடக்கும்போது வந்திருக்கு. அது வரும் காலங்களில் மாறிட்டுதான் இருக்கும். முந்தைய காலங்கள்ல இதுபோல வெற்றி தோல்வி எல்லா தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கு. எனவே, வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் கிடையாது.

விஜய்க்கு வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்காங்க இளைஞர்கள். அவர் இளைஞர்களின் எதிர்பார்ப்பை 100% நிறைவாக பண்ணனும். அது ரொம்ப முக்கியம். அந்த பொறுப்பும் அவருக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், இல்லன்னா இவ்வளவு பெரிய பொறுப்பை ஜனங்க அவர் கையில கொடுத்திருக்க மாட்டாங்க. அதை உணர்ந்து அவங்ககூட இருக்கிறவங்களும் செயல்படுவாங்கன்ற நம்பிக்கை இருக்கு. இது அமைஞ்சதுன்னா அது இளைஞர்களுக்கு அவங்க எடுத்த முயற்சி ஒரு சக்சஸ் ஃபுல்லா இருக்கும்.

விஜய் அரசியலுக்கு வந்ததால இப்போ திரையுலகத்துல விஜய்யோட இடத்தை நான் நிரப்புவேனா என்பது எனக்கு தெரியாது. சினிமால எனக்கு ஆர்வம் உண்டு, அதை செயல்படுத்திட்டு இருக்கேன். அது என்னன்றத காலம் தான் முடிவு பண்ணும்.

போதை கலாசாரம்

வணிகர்கள் இப்போ விக்கிரமராஜா தலைமையில் மிகச்சிறப்பா செயல்பட்டுட்டு இருக்காங்க. அவங்க இப்போ வியாபாரிகளுடைய குறைகளை உடனடியாக மத்திய அரசு, மாநில அரசுகளிடம் எடுத்து கொண்டு போய் அவங்களுக்கு தேவையான விஷயங்கள எடுத்து சொல்றாங்க. அதையும் மத்திய மாநில அரசுகள் நல்லா ஆராய்ந்து அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்து கொடுத்துட்டு இருக்காங்க. இது வரவேற்கத்தக்கது.

இளைஞர்கள் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்காங்க. பாலியல் வன்கொடுமை நிறைய நடந்திருக்கு. போதை கலாச்சாரம் என்பது முழுமையா தவிர்க்கணும். இதுபோல வன்முறைகள், பாலியல் கொடுமைகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கணும். நிலுவையே பண்ணக்கூடாது. பத்து மாதத்திற்குள் தண்டனை கொடுக்கணும். அது தான் இதை கட்டுப்படுத்தும். அப்போது தான் இதை சரிப்படுத்த முடியும்.

விஜய்க்கு ரசிகர்கள், இளைஞர்கள் அதிகமா வாக்கு போட்டிருக்காங்க. இந்த வெற்றியை அவங்க தானே உருவாக்கி இருக்காங்க. இன்னைக்கு ஒரு புரட்சியை உருவாக்கி இருக்காங்க. அவங்க எதிர்பார்ப்பை நிறைவு பண்ணி கொடுக்கணும். விஜய்யை கண்டிப்பா சந்திப்பேன்.

இன்னைக்கு ரசிகர்கள் மாஸ் ஆக்ஷன் கதையை தான் தியேட்டருக்கு வந்து பார்க்கிறாங்க. அதே போல பண்றது தான் எங்களுக்கு நல்லா இருக்கும். அந்த மாதிரி கதாபாத்திரம் பண்ணனும்னு நான் விரும்புறேன்.

அரசியல் பிரவேசம்

எனக்கு சினிமாத்துறை பிடிக்கும். எனக்கு முதலில் தொழில்தான். மக்கள் நலன்ல எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. நான் சின்ன வயசுல இருந்தே அதை செஞ்சுட்டு தான் இருக்கேன். தொடர்ந்து செஞ்சுட்டு தான் இருப்பேன். இன்னமும் அதிகப்படுத்தி கொண்டு செஞ்சுட்டு தான் இருக்கேன். அது கால நேரம் ஒத்துழைச்சதுன்னா நான் கண்டிப்பா அரசியல்ல இறங்கி செயல்படுவேன்.

கும்பகோணத்துல 'சரவணா ஸ்டோர்' ஓபன் பண்ற ஐடியா இப்போ இல்ல. இன்னும் மத்த ரெண்டு மூணு இடங்கள்ல பிளான் பண்ணிட்டு இருக்கோம். அதுக்கு அப்புறமா கும்பகோணம் வருவோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சேர்ந்து நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் குறித்து நான் டைரக்டர் நெல்சனிடம் சொல்லிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் ஒரே ஒரு கேமியோ வேணா பண்ணுவேன். ஆனா இன்னும் உறுதியாகல.

இவ்வாறு லெஜண்ட் சரவணன் தெரிவித்தார்.