தமிழக செய்திகள்

சட்மன்ற தேர்தல்: இதுவரை எத்தனை பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் தெரியுமா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள். நேற்று ஒரே நாளில் 1,600-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 30-ம் தேதி தொடங்கியது. நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.

இடையில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் கிடைத்தது. அதில் 3 நாட்கள் முடிவடைந்துவிட்டன. மார்ச் 30-ம் தேதியான முதல் நாளில் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2-வது நாளான கடந்த 2-ம் தேதி 788 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 3-ம் நாளான நேற்று 1,639 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வகையில் நேற்றுடன் மொத்தம் 3,000 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளாகும். காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட வேண்டும். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். பிற்பகல் 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக அறைக்குள் சென்றுவிட வேண்டும். சரியாக பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக அறையின் பிரதான வாயில் மூடப்பட்டுவிடும். 3 மணிக்குள் அவரது அலுவலகத்திற்குள் வந்துவிட்டவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.