தமிழக செய்திகள்

சட்டமன்ற சிறப்புக்கூட்டம் : நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

நீட் விலக்கு மசோதா சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில் கவர்னர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது; அதை நான் அனுமதிக்க மாட்டேன்.

ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணுடன் உள்ளது. இது யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கவர்னரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினர். பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது.

தொடர்ந்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க., காங்கிரஸ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

நீட் தேர்வு யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது எனபது குறித்து அ.தி.மு.க - தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தீர்மானத்தை இன்றே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த சபாநாயகர் அப்பாவு, நாள் குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்