தமிழக செய்திகள்

தமிழக வனப்பகுதியில் சிறுத்தை இறந்த நிலையில் மீட்பு

இப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகளுக்குப் பெயர் பெற்றது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான, பசுமையான மற்றும் பல்லுயிரினச் சூழல் கொண்ட பகுதியாகும். இது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய சூழலியல் மண்டலமாகும். இப்பகுதி யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகளுக்குப் பெயர் பெற்றது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ளதால், இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம்.

இந்நிலையில், இன்று கூடலூர் வனப்பிரிவுக்கு உட்பட்ட மே பீல்ட் எஸ்டேட் அருகே வயது முதிர்ந்த சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, கூடலூர் வனப்பிரிவு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு நடத்துகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கைகள் வெளியான பின்னரே, சிறுத்தை மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.