ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாலையோரம் சாவகாசமாக நடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையோரம் சிறுத்தை ஒன்று தோன்றியது. பின்னர் அது அமைதியாக சாலையோரம் நடந்து சென்றது. சிறுத்தையை பின்தொடர்ந்த வாகன ஓட்டி, பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடித்து மெதுவாக காரை இயக்கினார்.
சிறிது நேரம் சாலையோரம் நடந்து சென்ற சிறுத்தை, பின்னர் தடுப்புச் சுவரை தாண்டி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த அரிய காட்சிகளை வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், திம்பம் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.