தமிழக செய்திகள்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்புகழ் போற்றுவோம்! - சீமான்

பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என சீமான் தெரிவித்தார்.

சென்னை,

"புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

'வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள்

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!'

'நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்

நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!'

"செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே'

‘சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்;

செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்

பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு;

போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!' என்று பாடி, உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று!

தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

தாத்தா பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம்.

தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.