சென்னை,
தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
தீர்த்தகிரி சர்க்கார் என்ற பெயரில் பிறந்து, கொங்கு வேளாளர் மரபில் உதித்து, தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவரும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் அழியா முத்திரையை பதித்தவருமான மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளாகும்.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, அன்னிய ஆட்சிக்கு எதிராக 'வரி மறுப்பு' இயக்கத்தை தொடங்கி, மக்களை ஒருங்கிணைத்தவர் தீரன் சின்னமலை ஆவார். வரி செலுத்த மறுத்ததை கண்டித்துப் போர் தொடுக்க வந்த மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கு, அவரது வாழ்நாளின் முதல் தோல்வியை பரிசளித்தவரும் சின்னமலையே, அதன் பின்னரே ஆங்கிலேயர்களால் திப்புவை வீழ்த்த முடிந்தது.
நான் வரி செலுத்தமாட்டேன் என்று சொல்வதற்கு நீ யார்? என்று எதிரிகள் அவரிடம் வினவியபோது, நான் சிவன் மலைக்கும் சென்னமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை என்று அவர் கர்ஜித்து பதிலளித்தார். இந்த வெற்றியின் காரணமாகவே அவர் 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
மேலும், அவரது வீர செயல்களை போற்றும் வகையில், அவரது பெயருடன் தீரன் என்ற பட்டமும் இணைக்கப்பட்டது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான வரி மறுப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களை போர்க்களத்தில் மூன்று முறை தோற்கடித்த இந்த சிங்கம், தனது 49-வது வயதில் சங்ககிரி கோட்டையில் வீரமரணம் எய்தினார்.
தீரன் சின்னமலை பிறந்தநாளான இத்தருணத்தில், எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரை போற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.