மதுரை,
எனது உயிருக்கு ஆபத்து; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்" என மதுரை மாவட்ட எஸ்பியிடம் உசிலம்பட்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் தவெக-வை சேர்ந்த வழக்கறிஞர் எம். விஜய். இவர் மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். விஜய் அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறேன். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு எதிராக சில சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் எனது உயிருக்கும், உடமைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் எனக்கு ஆபத்து நேரலாம் என்ற பயம் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்குத் தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தவெக எம்.எல்.ஏ விஜய் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ-வின் இந்தத் திடீர் புகார் குறித்து மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக எஸ்பியிடம் மனு அளித்துள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.