தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் குடும்ப தகராறில் தங்கையின் கணவர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு குடுப்ப தகராறினால், மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து துரைசிங் (வயது 27) என்பவரை கொலை செய்த வழக்கில் இன்று திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கதிரவன் தீர்ப்பு வழங்கினார்.

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான இட்டமொழியைச் சேர்ந்த முத்துக்குமரன்(31) மற்றும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த குமார்(எ) முத்துக்குமார்(40) ஆகிய 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு முதலாவது குற்றவாளியான முத்துக்குமரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.4,000 அபராதம் மற்றும் 2வது குற்றவாளியான குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் திசையன்விளை காவல் நிலைய காவல் அதிகாரிகள், காவலர்கள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் காளிமுத்து ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன தண்டனை பெற்றவர்களில் 14 பேர் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. 

SCROLL FOR NEXT