சென்னை,
மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டின் 48 முக்கிய நகரங்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிவில், லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதை தொடர்ந்து இந்தூர் (197) மற்றும் ஜபல்பூர் (195) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மூன்று நகரங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திருச்சி சிறப்பாக செயல்பட்டு, 183 புள்ளிகளுடன் தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை, 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தை பிடித்தது.
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆய்வின் வகைப்பாட்டின்படி மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட தூத்துக்குடி நகரம், 142.2 புள்ளிகளை பெற்று, அப்பிரிவில் உள்ள 40 நகரங்களுக்குள் 35-வது இடத்தை பிடித்தது.
தமிழக நகரங்களின் இந்த பின்னடைவு குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "நகரங்களை தூய்மையாக வைத்திருக்க அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், என்னதான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அது மட்டுமே முழுமையான பலனை தராது. பொதுமக்களாகிய நாமும் முழு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பொது இடங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருப்பது போன்ற சுயக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே, தமிழக நகரங்கள் இப்பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.