தமிழக செய்திகள்

சுமைதூக்கும் தொழிலாளி திடீர் சாவு

வேடசந்தூர் அருகே மயக்கம் அடைந்து விழுந்த சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் திடீரென்று இறந்தார்.

நாமக்கல்லில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த அறிவழகன் என்பவர் ஓட்டினார். லாரியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டம் செல்லாம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 50), ரமேஷ், கதிர்வேல் ஆகியோர் வந்தனர். அந்த லாரி நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யர்மடத்துக்கு வந்தது. அங்குள்ள ஓட்டலில் டிரைவர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்பட 4 பேரும் உணவு சாப்பிட்டனர். பின்னர் லாரியில் ஏறி அவர்கள் புறப்பட தயாராகினர். அந்த நேரத்தில் ராஜ்குமார் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT