கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

லுக் அவுட் நோட்டீசுக்கு தடை... 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எ.வ.வேலுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

அறப்போர் இயக்கம் சார்பில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் மாநில நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், கரூரில் இந்த ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கடந்த ஜூன் 26-ந்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.

அதே நேரம் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்று விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர். இந்த 'லுக் அவுட் நோட்டீசை' ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எ.வ.வேலு, புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 15-ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரும் எ.வ.வேலு மனுவுக்கு ஜூலை 27-ம்தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.