தமிழக செய்திகள்

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது மாசி திருவிழா நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், வார விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபா ராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது மாசி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சந்திர கிரகணத்தை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை (மார்ச் 03) அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் முடிந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதனை முடிந்து தெப்ப மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.