தமிழக செய்திகள்

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

5 முனை போட்டி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக பாமக-வின் ஆதரவை எதிர்பார்த்து இருந்து வந்தது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை...

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT