தமிழக செய்திகள்

மதுரை: ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் தவறி விழுந்து பலி

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் தென்காசியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் சோழவந்தான் நெடுங்குளம் ரெயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், தென்காசி குருவங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுதர்சன் மற்றும் அவரது உறவினர் சென்னையில் இருந்து நெல்லை செல்லக் கூடிய விரைவு ரெயிலில் குருவங்கோட்டையில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது ரெயில்பெட்டியின் படியில் அமர்ந்து வந்த சுதர்சன் தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார் என தெரியவந்தது.