தமிழக செய்திகள்

ஆகஸ்டு 14-ந்தேதி முதல் மதுரை-அபுதாபி விமான சேவை மீண்டும் தொடக்கம்

ஆகஸ்டு 14-ந்தேதி முதல் மதுரை-அபுதாபி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

மதுரை,

விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு தினசரி 18 விமான சேவை உள்ளது. இதுபோல், சர்வதேச விமான சேவையாக இலங்கைக்கு தினசரி விமான சேவை உள்ளது.

கடந்த காலங்களில் துபாய், அபுதாபி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வளைகுடா பகுதியில் நிலவிய போர் பதற்றம் காரணமாக, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

மீண்டும் தொடக்கம்

இந்த நிலையில், போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மதுரையில் இருந்து அபுதாபிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆகஸ்டு 14-ந்தேதி முதல் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மதியம் 1.50 மணிக்கு அபுதாபியில் இருந்து மதுரை வரும் விமானம், மறுமார்க்கமாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு மதியம் 2.50 மணிக்கு புறப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.