மதுரை,
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி தேவநந்தா (வயது 16) கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் செந்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய சுமார் 52 ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை ஊழியர்களிடம் அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சுத்தமான முறையில் வழங்க வேண்டும் என்றும் ஷவர்மாவை நிரப்பும் எந்திரத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் சமைத்த உணவுப்பொருட்களை ஃப்ரீசரில் வைக்க கூடாது எனவும் உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்தனர்.