தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை அளவீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அவகாசம்

திருப்பரங்குன்றம் மலை அளவீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்பேரில் அதிகாரிகளிடம் புதிதாக மனு அளித்தேன். ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வக்கீல், திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி கடந்த வாரம் நடந்தது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன. எனவே இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.