மதுரை
மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார்.
இந்த வழக்கில், நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர் மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நித்யானந்தா சார்பில், இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாகவும், அதில் இருந்து விலக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, நித்யானந்தா மடாதிபதி பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெற்றதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தும் அதன் நிர்வாகத்தில் தலையிட தடை விதித்தும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மேல்முறையீடு செய்யபட்டது.
இந்த வழக்கில் மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது
நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.