மதுரை,
மதுரை அருகே பரவை பவர்ஹவுஸ் எதிரே உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் முத்துமணி(வயது 37). இவர் கப்பலூர் பகுதியில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீடு புகுந்த முத்துமணி, மாணவியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்த மாணவி, இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவருடைய தாயார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். அப்போது மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தார். அதற்கு மாணவி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதையடுத்து மாணவியின் தாய், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்தனர்.