மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
சேதுபதி உயர்நிலை பள்ளி விளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உணவின் தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அன்னதான ஏற்பாடுகளையொட்டி சேதுபதி பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.