மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் கார்த்திகா கோபித்துக்கொண்டு உறங்கான்பட்டி அருகே அ.கோவில்பட்டியில் உள்ள தன் தாயார் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையை பிரபாகரன் பராமரித்து வந்தார்.குழந்தையை தன்னிடம் தருமாறு பிரபாகரனிடம் அடிக்கடி கார்த்திகா கூறி வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் அவ்வப்போது பிரபாகரன், கார்த்திகாவிடம் தகராறு செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இந்தநிலையில் தனது மனைவி கார்த்திகாவை எரித்து கொன்றுவிட்டதாக கொட்டகுடி கிராம நிர்வாக அலுவலர் செல்லத்திடம் தெரிவித்து பிரபாகரன் நேற்று சரண் அடைந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அதிகாரி, மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து சென்று பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர். கார்த்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி கடந்த 3-ந்தேதி கார்த்திகாவை வரவழைத்து ஊருக்கு வெளியே அழைத்து சென்றேன். அங்கு கார்த்திகாவை கொடூரமாக கொன்று, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, சாம்பலை அருகில் உள்ள விவசாய கிணற்றில் கரைத்து விட்டதாக பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசாரிடம், கார்த்திகாவை கொலை செய்து உடலை எரித்த இடத்தையும், சாம்பலை கரைத்த கிணற்றையும் காண்பித்துள்ளார். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சாம்பல் மற்றும் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த பயங்கர கொலை தொடர்பாக பிரபாகரனின் நண்பர்கள் கரண் மற்றும் சாந்தகுமார் ஆகியோரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.