தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 99 வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று பரிசீலனை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.ஏற்கனவே த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 18 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தாராபுரத்தில்

தாராபுரம் பகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் மற்றும் தொண்டர்களுடன் வந்து, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, த.வெ.க. வேட்பாளர் சத்திய பாமாவுக்கு எதிராக அ.தி. மு.க. தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது.

மொத்தம் 51 வேட்பு மனுக்கள்

அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன், கள் இயக்க வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT