மகேஷ்குமார் அகர்வால் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இன்று பொறுப்பேற்கிறார் மகேஷ்குமார் அகர்வால்

தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை 10:45 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவி ஏற்க இருக்கிறார்.

யார் இந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்..?

தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.

சட்டம்- ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார். 1994ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால். சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்

சென்னை போக்குவரத்து துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆக இருந்தவர். சிசிடிவி கேமராக்களை சென்னை நகரில் நிறுவ வலது கரமாக செயல்பட்டவர்.

நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர். சேலம் ரெயில் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர். மெச்சத்தகுந்த பணிக்காக முதல்-அமைச்சரின் பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார்.