தமிழக செய்திகள்

பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பிய இரிடியம் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது

இரிடியம் மோசடி மற்றும் ரிசரிவ் வங்கி போலி ஆவண மோசடி சம்பந்தமாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

சென்னை,

போலி ரிசர்வ் வங்கி ஆவணங்கள் மற்றும் இரிடியம் காப்பர் விற்பனை மோசடி வழக்கில் பஹ்ரைனிலிருந்து திரும்பிய முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிசிஐடி.

இது தொடர்பாக, தமிழக டிஜிபி அலுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இரிடியம் காப்பர் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை விடுவிக்க ரிசர்வ் வங்கிக்கு சேவை வரி மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்கு கமிசன் தொகை வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் மோசடி கும்பலை சேர்ந்த எதிரிகள் பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை கூறி, அவர்களது நம்பிக்கையை பெறுவதற்காக ரிசரிவ் வங்கி. DRDO, BAARC & IT ஆவணங்கள் போன்று போலியான ஆவணங்களை தயார் செய்து பொதுமக்களிடம் காட்டி அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளனர்.

மோசடி

இம்மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 15.03.2025-ம்தேதி சேலம் மாநகர திட்டமிட்ட குற்றங்கள் பிரிவில் குற்ற எண்.3/2025 சட்டப்பிரிவு 419, 420, 465, 468 மற்றும் 471 இந்திய தண்டனை சட்டம். பிரிவு 66D தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் பிரிவு 3 r/w 5 The Emblem and Names (Prevention of improper use) Act, 1950-ன்படி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

வழக்கின் புலன் விசாரணையில் சுமார் 50 நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 19 எதிரிகளை கண்டறிந்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிகணினிகள், கைப்பேசிகள். பிரிண்டர் போன்ற மின்னனு சாதனங்கள். ரிசர்வ் வங்கி / DRDO-யின் ஆவணங்களை போன்று தயார் செய்யப்பட்ட போலி ஆவணங்கள், போலி வங்கி காசோலைகள் மற்றும் இரிடியம் என்று கூறி ஏமாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள் / உலோக பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளி

வழக்கின் தொடர் புலன்விசாரணையில், ரிசர்வ் வங்கியிலிருந்து மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுவதற்கான ஆதாரமாக வழங்கப்பட்டதை போன்ற போலியான UOB மற்றும் RBI ஆவணங்களை சென்னையை பூர்வீகமாக கொண்ட சுரேஷ்குமார் த/பெ கணேஷ்ராஜா என்பவர் பஹ்ரைன் நாட்டிலிருந்து தயார் செய்து கொடுத்துள்ளார் என்பதும். அதற்காக ரூ.45,000 பெற்றுள்ளார் என்பதும், கண்டறியப்பட்டது. எதிரி பஹ்ரைன் நாட்டிலிருந்து செயல்பட்டு வருவது தெரியவந்ததால் அவருக்கு எதிராக கடந்த 07.08.2025-ம் தேதி Look Out Circular (LOC) பிறப்பிக்கப்பட்டது.

கைது

பின்னர் தொடர் கண்காணிப்பின் மூலமாக 31.07.2026-ம்தேதி பஹ்ரைனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எதிரி சுரேஷ்குமாரை கைது செய்து. இன்று (01.08.2026) நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. அவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்யவேண்டி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை செய்யப்பட்டுவருகிறது. இதுவரை, இரிடியம் மோசடி மற்றும் ரிசரிவ் வங்கி போலி ஆவண மோசடி சம்பந்தமாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.