சென்னை,
பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு” வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடமுறையை முற்றிலும் ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அலுவலர்கள் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவண பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்படும் என்பதை தெரிவித்தார். அதேபோல் அனைத்து துறைகளிலும் அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று எனது தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தற்பொழுது அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சார்பதிவாளர் நிலை அலுவலர்களுக்கு மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 10.05.2026 முதல் நாளது வரை 259 சார்பதிவாளர்களை பொறுத்து மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 249 சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாமல், 10 நிர்வாக சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
மேற்கண்ட மாறுதல் ஆணைகள் அனைத்தும் பணியாளர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டும், வெளிப்படை தன்மையுடனும் சார்பதிவாளர்களின் திறன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி மாறுதல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தும், நிர்வாக நலனை முன்னிறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாறுதல் ஆணைகள் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை நிலை நிறுத்திட வழிவகுக்குகிறது.
மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் “வருகை இல்லா ஆவணப்பதிவு” (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 x 365) இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான”வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்ட ஆவணங்களை பொறுத்து கட்டாயமாக்கப்படுகிறது.
அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)
ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)
1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.
3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.
6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.
7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.
தொழில்நுட்ப தேவைகள்
1. இணைய இணைப்பு
2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி
3. புகைப்படக்கருவி
இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாக குறையும்.
அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவு பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவு சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வணிகவரி, பத்திர பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், பத்திரப் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.