சென்னை,
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தபால் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தபால் துறை தேர்வை தமிழில் நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், இருமொழி கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது. இது குறித்து மக்களவையில் நீங்கள் குரல் கொடுங்கள், மாநிலங்களவையில் நாங்கள் குரல் கொடுக்கிறோம் என கூறினார்.
அமைச்சர் சி.வி. சண்முகம் பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொண்டு அடுத்தக்கட்ட முடிவை எடுக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எந்த இடத்திலும் முதல்வர் கூறவில்லை.
24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள்.
மத்திய - தமிழக அரசுக்கும் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய முடியாதா என பார்க்கிறார்கள், ஆனால் எதுவும் பலிக்காது என கூறினார்.