மாமல்லபுரம்,
இந்தியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் வந்த ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்தனர். பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசித்தனர்.
கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கலை நிகழ்ச்சியை இருதலைவர்களும் பார்த்து ரசித்தனர். கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நாட்டியம் நிகழ்த்திய கலைக்குழுவினருடன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். விருந்தில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு, குறிப்பாகத் தமிழக உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவனரிசி அல்வா போன்றவையும், செட்டிநாடு முதல் காரைக்குடி உணவு வகைகளும் பரிமாறப்பட்டது.
7 மணியளவில் இரவு உணவு விருந்து நிகழ்ச்சி துவங்கிய நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றுள்ளனர்.