தமிழக செய்திகள்

வீடு புகுந்து கந்துவட்டி கேட்டு பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கியவர் கைது

நெல்லையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த நபர் கந்துவட்டி கேட்டு மிரட்டியதுடன், சாதி பெயரைச் சொல்லி திட்டி கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

திருநெல்வேலி,

திருநெல்வேலியில் வீடு புகுந்து கந்துவட்டி கேட்டு பல்கலைக்கழகப் பேராசிரியரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 லட்சம் கடன்

நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகுமாரன் (வயது 40), நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(45) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த பாலகுமாரன், மீதி பணத்தை விரைவில் தருவதாகக் கூறியுள்ளார்.

கந்துவட்டி கேட்டு மிரட்டல், தாக்குதல்

இந்த நிலையில் சம்பவத்தன்று, செல்வம் வி.எம்.சத்திரத்தில் உள்ள பாலகுமாரன் வீட்டிற்குச் சென்று பாக்கியுள்ள பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது அதிக கந்துவட்டி கேட்டு மிரட்டியதுடன், பாலகுமாரனை சாதி பெயரைச் சொல்லி திட்டி கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது

இந்த தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் பாலகுமாரன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் போலீசார், பேராசிரியரை தாக்கிய செல்வத்தை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT