தமிழக செய்திகள்

சட்ட விரோதமாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் வாகன தணிக்கையின்போது போலீசார் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் விற்பனைக்காக ரூ.2 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் நேற்று சிதம்பரநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அவர் தூத்துக்குடியை சேர்ந்த வன்னியராஜன் (வயது 52) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் வன்னியராஜனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.