தமிழக செய்திகள்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

தூத்துக்குடியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி,

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரெயிலின் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரெயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரெயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் மற்றும் முகவரி விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

மேலும், அவர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் அரக்கு நிற பேண்ட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.