தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்குத் திட்டங்குளம் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (58), வடக்கு திட்டங்குளத்தில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று அவர் பணியில் இருந்தபோது, மரம் அறுக்கும் இயந்திரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இயந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து, பால்ராஜ் மற்றும் அங்கிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி உபேந்திர மஞ்சி ஆகியோர் கடுமையாகக் காயமடைந்தனர். உடனடியாக பால்ராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காயமடைந்த உபேந்திர மஞ்சி, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை உரிமையாளர் முருகனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.