தமிழக செய்திகள்

11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு மாணிக்கம் தாகூர் கடிதம்

அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டார்.

சென்னை,

இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் கைது செய்யபட்டதாகவும், அவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக விடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நம் மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத எஞ்சின் கோளாறு காரணமாகவே அவர்கள் எல்லை தாண்டிச் செல்ல நேரிட்டது. எனவே, கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் உடனடியாக தாயகம் திருப்ப தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

படகை ஒப்படைக்க வேண்டும்

மேலும், வாழ்வாதார ஆதாரமான படகை உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுபோன்று தொழில்நுட்பக் கோளாறால் எல்லை தாண்டும் மீனவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப இருநாடுகளும் இணைந்து தெளிவான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.