சென்னை,
வியட்நாமின் பு குவாக் தீவுக்கு இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை படகில் சுற்றுலா சென்றனர். மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.