நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்திருக்கக்கூடிய மாஞ்சோலை எஸ்டேட் பகுதி, மிகப் பிரபலமான தேயிலை தோட்டமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் இங்கு உள்ளன.
இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நேரடி கண்காணிப்பில இந்த அடர்வனப் பகுதிகளை முழுவதும் கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி தற்போது அந்த மாஞ்சோலை வனப்பகுதி முழுவதுமே வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், தற்போது இந்த மாஞ்சோலை எஸ்டேட் தேயிலை தோட்டம் முழுவதுமே வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்ததாகவும் வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
முன்னதாக மாஞ்சோலையில் பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், தற்போது மாஞ்சோலை எஸ்டேட் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அந்த நகலும் அந்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.