திருச்சி,
பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், 'இந்திய ஜனநாயகப் புலி' என்ற சொந்தக் கட்சியை நடத்தி வரும் அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் லால்குடி சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிரச்சாரம் செய்த போது திடீரென கல்லக்குடி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டார். உடனே போலீசார் பதறி போய், என்னவென கேட்க, "எனக்கு கருணாநிதி நினைவு வந்துவிட்டது. அதனால் இந்த தண்டவாளத்தில் படுத்தேன்" என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லக்குடி ரெயில் மறியல் போராட்டம் 1953 ஆம் ஆண்டு நடந்தது. டால்மியாபுரம் ரெயில் நிலையம் என பெயர் மாற்றத்தை கண்டித்தும், கல்லக்குடி என மாற்றக் கோரியும் கருணாநிதி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.