விருதுநகர்,
சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு 42 மற்றும் 21 கி.மீ. தூரமும், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு 5 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இவர்களுடன் இணைந்து 91 வயது ராஜேந்திரன் 21 கி.மீ. பிரிவில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சர்வதேச முதியோர் தடகள போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.