கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்! இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்?

எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.